தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தாமல் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறினர். இதையடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இரண்டு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஜனவரி 20-ம் தேதி நேரடி முறையில் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வருகின்ற 20ஆம் தேதி பல்கலைக்கழகங்களில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மாணவர்களின் நலன் கருதி நேரடி தேர்வு நடத்த அரசு திட்டமிட்டு இருந்தது, இந்நிலையில் வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், கொரோனா தாக்கம் குறைந்தால் மட்டுமே தமிழகத்தில் தேர்வுகள் நடைபெறும் என கூறினார்.

0 Comments