Ads

ஏப்ரல் 2-ம் வாரத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தன.


இதையடுத்து 10ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து 2020- 21ம் கல்வியாண்டிலும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக பிளஸ்- 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் என தேர்ச்சி வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 9-12 ஆம் வகுப்பு வரை செப்., 1 முதலும், 1- 8 வகுப்பு வரை நவ., 1 முதலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்தன.

அதன்பின் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக ஜனவரி முழுதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் இம்மாதம் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் ஓரளவு முடிக்கப்பட்டு இருப்பதால், முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. இத்தேர்வுகள் முதன்முறையாக அரசு தேர்வுத் துறையின் பொதுவான வினாத்தாள் வழியே, பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் வரும் 17 ஆம் தேதி முடிகின்றன. அதனை தொடர்ந்து 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ல் தொடங்க இருக்கிறது. இதுவும் பொதுத்தேர்வு போன்று ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2-ம் வாரத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. முன்னதாக பொதுத்தேர்வு போன்று 2 திருப்புதல் தேர்வுகளை நடத்துவதால், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் முழுமையாக தயாராக வாய்ப்புள்ளது. ஆகவே ஏப்ரல் இறுதி வாரத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பொதுத் தேர்வை ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கினால், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் இடைவெளியின்றி தொடர்ச்சியாக தேர்வை முடிக்க ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு நடத்துவதால் பொதுத் தேர்வு தொடர்பான அழுத்தம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நீண்ட நாட்கள் நீடிக்காமல் குறைக்க முடியும் என்று உளவியலாளர்களின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மே 1, மே தினம், மே 2 அல்லது 3ல் ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாட்கள் என்பதால், அதற்கு முன் தேர்வை முடித்து விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் மாற்றம் ஏற்பட்டால் ஏப்ரலில் தேர்வை தொடங்கி, ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு மே முதல் வாரத்தில் தேர்வை முடிக்கும் வகையிலும், மற்றொரு அட்டவணையையும் அதிகாரிகள் தயாரித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை, தேர்வு துறை அதிகாரிகள் ஆலோசித்து தேர்வு அட்டவணையை விரைவில் அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வான 2-ம் கட்ட பருவத் தேர்வு ஏப்., 26ல் தொடங்கி மே முதல் வாரம் முடிந்து விடும். இதன் காரணமாக நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மே மாதம் தயாராக வாய்ப்பு இருக்கிறது. அவர்களை போன்று தமிழக மாணவர்களும் நீட், ஜே.இ.இ., ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும், ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை மே மாதம் கிடைக்கும் வகையிலும், ஏப்ரலில் பொதுத் தேர்வை முடிக்கவும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் ஏற்கனவே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாமல் "ஆல் பாஸ்" பெற்று வந்துள்ளனர்.

இதனால் அவர்கள் பொதுத் தேர்வே இன்றி பிளஸ்- 2வுக்கு வந்தால் அடிப்படை பாடங்களை படிக்காமல் பொதுத் தேர்வை எழுத திணறுவார்கள் என்று கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். ஆகவே பிளஸ்-1 பொதுத்தேர்வை எப்படியாவது நடத்த ஆலோசனை நடந்துள்ளது. முதலில் பிளஸ்-1 மாணவர்களுக்கு மாவட்ட அளவில் உற்சாகமூட்டும் தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டு, பிறகு பொதுத் தேர்வு தொடர்பாக முடிவு செய்யவும் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers